இந்திய பட்டயக்கணக்காளர் மையத்தின் பெங்களூரு கிளைக்கு புதியத் தலைவராக பட்சிவராம்சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய பட்டயக்கணக்காளர் மையத்தின் பெங்களூரு கிளை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய பட்டயக்கணக்காளர் மையத்தின் பெங்களூரு கிளைக்கு 2019-20-ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் குழு கூடி பெங்களூரு கிளையின் புதியத் தலைவராக பட்சிவராம் சங்கரை ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. இவர், இன்டெல் கேப் நிறுவனத்தில் நிதித் துறை துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். மையத்தின் பெங்களூரு கிளையின் 57 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
பெங்களூரு கிளையில் தற்போது 14 ஆயிரம் பட்டயக்கணக்காளர்கள், 35 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது, நாட்டின் 2-ஆவது பெரிய கிளையாகும்.
பட்டயக்கணக்காளர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்காக தனிவலைத் தொலைக்காட்சி, பயில் அறை, இணைய வழிப் பாடம் நடத்துதல் போன்றவற்றை அறிமுகம் செய்ய புதிய தலைவர் பட்சிவராம்சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த கிளையின் புதிய துணைத் தலைவராக ரவீந்திரா எஸ்.கோரே, செயலாளராக பி.டி.ஷெட்டி, பொருளாளராக டி.ஸ்ரீனிவாசா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.