கோலார் தங்க வயலில் எருதாட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல் கே.என்.ஜே.எஸ்.அண்டு டபிள்யு என்னும் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு, பிழைப்புக்காக தங்க சுரங்கத்தில் வேலை செய்ய வந்த தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை மறக்கவில்லை.
தமிழர் திருநாள் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14,15,16,ஆகிய தேதிகளில் 3 நாள்கள் விழா நடைபெறும். முதல் நாள் பெண்களுக்கு கோலப் போட்டியும், இரண்டாம் நாள் இன்னிசை கச்சேரியும், மூன்றாம் நாள் எருதாட்டமும் நடைபெறும். இதில் தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லையோர ஊர்களில் இருந்தும் காளைகள் பங்கேற்கும்.
இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஒருவர் கீழே தடுமாறி விழுந்து இறந்தார். இதனால் உள்ளூர் போலீஸ் எருதாட்டத்துக்கு தடை விதித்தனர். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தடை காரணமாக எருதாட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததால் தங்கவயல் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
எருதாட்டத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இந்தநிலையில் பிராணிகள் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தடையை நீங்கினாலும், உள்ளூர் போலீஸார் இந்த பகுதியில் காளை வெள்ளோட்டத்து அனுமதி வழங்க மறுக்கின்றனர். அப்பகுதி பிரமுகர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வெள்ளோட்டம் நடத்த அனுமதி பெற முடியவில்லை.
ஆனாலும், பொங்கல் திருநாள் முன்னிட்டும் ஒவ்வொரு ஆண்டும் கோலப்போட்டியும், இன்னிசை கச்சேரியும் நடத்துகின்றனர். மாட்டுபொங்கல் அன்று காளைகளை அலங்கரிப்பதோடு திருப்தி அடைகின்றனர். கடந்த ஆண்டு நடந்த கோலப்போட்டியில், வண்ண கோலங்கள் மூலம் அப்பகுதி பெண்கள் தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் அரசுக்கு எதிர்ப்பைத்
தெரிவித்தனர்.