மங்களூரு விரைவு ரயிலில் ஏற முயன்று, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆர்.பி.எஃப். தலைமைக் காவலரை பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9-ஆவது நடைமேடையில் இருந்து மங்களூரு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது. மெதுவாக நகரத் தொடங்கிய, இந்த ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறுவதற்கு 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் முயன்றார். எதிர்பாராதவிதமாக அவர் தவறி ரயிலுக்கும், மேடைக்கும் இடையே சிக்கி கொண்டார்.
இதை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப் தலைமைக் காவலர் சாஜிவ்குமார் கண்டார். உடனடியாக ரயில் பயணிகள் உதவியுடன் ரயிலின் அபாயசங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
பின்னர், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கியிருந்த அந்த பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சாஜிவ்குமாரை பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.