சென்னை அருகே எண்ணூரில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
எண்ணூர் நேதாஜி நகரில் தனியார் கண்டெய்னர் லாரி நிறுத்துமிடம் உள்ளது. இங்கு, காவலாளியாக, பிகாரை சேர்ந்த ராம் ஈஸ்வர் என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு, அங்கேயே வசிக்க வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராம், அந்த வீட்டின் ஒரு பகுதியில் காய்கறி செடிகளை வளர்த்து வந்தார். அந்த செடிகளுடன் ராம், கஞ்சா செடியும் வளர்ப்பதாக எண்ணூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் எண்ணூர் போலீஸார், செவ்வாய்க்கிழமை அங்கு திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் ராம், அங்கு கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்த கஞ்சா செடியை கைப்பற்றி, ராம் ஈஸ்வரை கைது செய்தனர்.