ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, போனஸை மின்சார வாரியமே நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை அனல்மின் நிலைய 1-ஆவது நிலை வாயில் அருகே அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதில் சிஐடியு செயலாளர் சுந்தரம், மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின்நிலைய தலைவர் வெங்கட்டையன் கூறுகையில், ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் வெள்ளிக்கிழமை (நவ. 16) குறளகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம் என்றார்.