நங்கநல்லூரில் கந்துவட்டிக் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நங்கநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனக்கு பணத்தேவை ஏற்பட்டதை அடுத்து, ஆவடியை சேர்ந்த ரஜினி என்ற அன்புச்செல்வனிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் பெற்றார். அப்போது ரஜினி, சுப்பிரமணியத்திடம் வெற்று இருபது ரூபாய் முத்திரை தாளில் கையெழுத்து பெற்றுக் கொண்டு, பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியம், வட்டியுடன் சேர்த்து ரூ. 7 லட்சத்தை திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் ரஜினி மேலும் ரூ.10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். அதேபோல், ஏற்கெனவே சுப்பிரமணியம் கையெழுத்துபோட்டு கொடுத்த வெற்று முத்திரைத் தாளில், அவரது வீட்டை குத்தகைக்கு விட்டது போன்று போலியான ஆவணத்தை ரஜினி தயார் செய்துள்ளார்.
இதுதொடர்பான பிரச்னையில் சுப்பிரமணியத்தை ரஜினி தாக்கவும் செய்தாராம். இதையடுத்து சுப்பிரமணியம், பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமியிடம் அண்மையில் புகார் தெரிவித்தார். இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பழவந்தாங்கல் போலீஸாருக்கு, பரங்கிமலை துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து பழவந்தாங்கல் போலீஸார் ரஜினி மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.