தூய்மைப்படுத்தும் பணியில் பெல்ஜியம் நாட்டின் தொழில்நுட்ப இயந்திரத்துடன் களமிறங்கியுள்ளது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம்.
மெரீனா கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமையிலும், அண்ணாநகர், வடபழனி, அரும்பாக்கம் போன்ற பகுதிகளில் வார நாள்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். காலை 5.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை துப்புரவுப் பணியில் ஈடுபட்டு சுமார் 200 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர்.
இது குறித்து அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அகமது கூறியது: ஹர்பன் ட்ரீ டைமன்ஷன் அண்ட் லிமிடெட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிஷேக் மேத்தா, அபினய் மேத்தா சகோதரர்கள் சமூக சேவைக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தை வாங்கி பொது நலனுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளனர். தற்போது ஒரே இயந்திரம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மேலும், 10-க்கும் மேறபட்ட இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்த உள்ளனர்.
எங்களின் துப்புரவு சேவையைப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பார்த்து பாராட்டி தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த இயந்திரம் மூலமான துப்புரவுப் பணிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. சென்னைக்கு முதல்முறையாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த நவீன இயந்திரம் 350 கிலோ எடையுள்ளது. ஆகையால், இந்த இயந்திரத்தை யாரும் தள்ளியோ, இழுத்தோ பயன்படுத்த முடியாது; சென்சார் மூலம் இயங்குகிறது. மேலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த இயந்திரம் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை இருந்த இடத்திலிருந்தே அறியலாம்.
இந்த இயந்திரங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வீணாக்காமல் உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.