மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர். அதன்படி மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை பரிசோதித்தபோது சென்னையைச் சேர்ந்த 2 பேர் 600 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்தத் தங்கக் கட்டிகளை எல்.இ.டி.பல்ப், டிவி ஸ்பீக்கர், செல்லிடப்பேசி பேட்டரிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ரூ.18 லட்சம் மதிப்புள்ள இந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.