பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் ரூ.3.74 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 5 கிலோ வாட் சூரியஒளி மின்உற்பத்தி தயாரிப்பு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அலுவலக கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 662 கட்டடங்களில் பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் சூரிய ஒளி (சோலார்) மூலம் 3.064 மெகாவாட் திறன் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் முதற்கட்டமாக ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வார்டு-53 படவேட்டமன் கோயில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.3.74 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மூலம் 5 கிலோ வாட் திறன் மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இப்பணியை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, மீதமுள்ள கட்டடங்களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவ், துணை ஆணையர்கள் பி.குமாரவேல் பாண்டியன், எஸ்.திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.