ஆயுத பூஜையை முன்னிட்டு, எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கை:
ஆயுத பூஜையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் மத அடிப்படையிலான எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இந்தநிலையில், சில அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை தடுத்து நிறுத்தி, அரசு உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி அரசு அலுவலகங்களையும், காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எனவே, வடக்கு, தெற்கு, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர்கள் இதுகுறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, எவ்வித அசம்பாவிதமும் நிகழாவண்ணம் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதி காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.