விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில், 200 சிலைகள் திங்கள்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகளால் 2,520 சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சிலைகள் கடந்த சனிக்கிழமை முதல் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2,320 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இதையொட்டி, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைகளை கரைப்பதற்காக திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் உள்ள கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் விநாயகர் சிலை கரைப்பின் இறுதி நாளான திங்கள்கிழமை சுமார் 200 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இதையொட்டி பல்வேறு இந்து அமைப்பினர் சிலைகளை முக்கிய சாலைகளின் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக கடற்கரைக்குச் கொண்டு சென்றனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.