தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் மின்வெட்டைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மொத்த மின்தேவை 15,000 மெகாவாட் என்ற நிலையில் இருக்கும்போது, உற்பத்தி 8,200 மெகாவாட் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இந்த மின் பற்றாக்குறைக்கு தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். தமிழக அரசு மற்றும் மின் வாரியத்தின் மெத்தனப்போக்கே, பல பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவதற்குக் காரணம். எனவே, இந்த மின்வெட்டைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அதே போன்று தமிழக மின் வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்க போதுமான நிதி உதவியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பதோடு, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கோரியுள்ள அளவு நிலக்கரியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.