சென்னை ராஜாஜி சாலையில் காவல் துணை ஆணையர் கார் விபத்தில் சிக்கியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, தலைமை செயலகத்தில் புதன்கிழமை சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மல்லிகா பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பின்னர் மல்லிகா, அவரது காரில் அலுவலகத்துக்குப் புறப்பட்டார் . தலைமைச் செயலகம் அருகே ராஜாஜி சாலையில் செல்லும்போது, அங்கு வந்த மற்றொரு கார், துணை ஆணையர் மல்லிகாவின் கார் மீது திடீரென பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த துணை ஆணையர் மல்லிகா, அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோர் காயமின்றி தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.