சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச குடிநீர் வழங்கும் இயந்திரம் தமிழக ராஜஸ்தானி சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 5,000 லிட்டர் தூய்மையான குடிநீரை வழங்கும் திறன் கொண்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.12.5 லட்சம் செலவில் இலவச குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ராஜஸ்தான் சங்கம் வழங்கியுள்ளது. இந்த இயந்திரம், ரயில் நிலையத்தின் 9, 10, 11 நடைமேடைகளின் அருகில் மக்கள் கூடும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் மூலமாக , ஒரு மணி நேரத்தில் 5,000 லிட்டர் சுத்தமான குடிநீர் பெற முடியும். ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் சாதாரண நீரை இந்த இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்து தூய்மையான நீராக வழங்கப்படுகிறது. இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு தினமும் 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் பயணிகளுக்கு கிடைக்கும்.
இதுகுறித்து தமிழக ராஜஸ்தானி சங்கத்தினர், எங்கள் சங்கம் 50-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது. இதையொட்டி, ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தில் பெறப்படும் நீரை இந்த இயந்திரம் மூலம் சுத்திகரித்து, சுகாதார குடிநீர் பயணிகளுக்கு வழங்கப்படும்.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களில் பெற முடியும். எழும்பூர் ரயில் நிலையத்திலும் ஒரு குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நவீன்குலாதி, கூடுதல் மேலாளர் கே.மனோஜ், நிலைய மேலாளர் பி.குகநேசன், தமிழக ராஜஸ்தானி சங்கத் தலைவர் அசோக்குமார் மேத்தா, பொதுச் செயலர் ராஜேந்திரகுமார், ஒருங்கிணைப்பாளர் வினோத் ஜெயின் உள்பட பலர் பங்கேற்றனர்.