சென்னை வடபழனியில் கவனத்தைத் திசை திருப்பி ரூ.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அமெரிக்காவில் பணிபுரியும் இவர், அண்மையில் சென்னை வந்தார். தனது காரில் தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு, வடபழனி 100 அடி சாலைக்கு வந்தார்.
காரை நிறுத்திவிட்டு, அவர் மட்டும் அங்குள்ள ஒரு அலுவலகத்துக்குச் சென்றார். இதனால் காரில் அவரது ஓட்டுநர் மட்டும் இருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், காரின் கீழே இருபது ரூபாய் நோட்டு கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ஓட்டுநர், காரை விட்டு கீழே இறங்கி அந்த ரூபாய் நோட்டை எடுக்க முயன்றார். அந்நேரத்தில், அந்த மர்ம நபர் காரில் பணத்துடன் வைக்கப்பட்டிருந்த பையை திருடிக் கொண்டு தப்பியோடினார். இதைப் பார்த்து கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், பொன்னுசாமியிடம் சம்பவத்தை கூறினார்.
இது தொடர்பாக பொன்னுசாமி, உடனடியாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், வழிப்பறி செய்யப்பட்ட அந்த பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரும், யூரோவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
இதற்கிடையே, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கும் வழிப்பறி தொடர்பான காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.