இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிக்காக பெரம்பூர் பூங்காவின் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்நிலை பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது.
இதற்கிடையில், இரண்டாவது கட்டமெட்ரோ ரயில் திட்டப் பணி ரூ.85 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நிலம் எடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவின் ஒரு பகுதியை மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. 8,473 சதுரமீட்டர் பரப்பளவு உள்ள இந்த பூங்காவில் 3,300 சதுரமீட்டர் பரப்பு மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக பயன்படுத்த கேட்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ளஅம்மா உணவகமும் மெட்ரோ ரயில் பணிக்காக கேட்கப்பட்டுள்ளது. இந்த அம்மா உணவகம் 46 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இதில் 42 சதுர இடம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தேவைப்படுகிறது. அதேபோல், மேலும் ஒருசில இடங்கள் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக மாநகராட்சியிடம் முன்மொழியப்பட்டுள்ளது. மாநகராட்சி அனுமதிக்கு பிறகு இப்பகுதியில் மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.