மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி உதவி ஆணையர்கள் 10 பேரும், காவல் ஆய்வாளர்கள் 35 பேரும் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் கண்டறியப்பட்டு, கடந்த ஒரு வாரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது, உதவி ஆணையர்கள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அதில், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மேற்கு மண்டலத்தின் எம்.மகிமைவீரன், வளசரவாக்கத்துக்கும், வளசரவாக்கம் பி.சம்பத் சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவின் மேற்கு மண்டலத்துக்கும், அம்பத்தூர் வி.கர்ணன் சென்னை மதுவிலக்குப் பிரிவின் வடக்கு மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைப்போல, சென்னையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், திருவான்மியூர் கிறிஸ்டின்ஜெயசீல் பல்லாவரத்துக்கும், வடபழனி சந்துரு தாம்பரத்துக்கும், மாம்பலம் மோகன்ராஜ் குரோம்பேட்டைக்கும்,சேலையூர் செல்லப்பா பெரியமேட்டுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஓரிரு நாள்களில் அவரவர் இடங்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.