மகாத்மா காந்தியின் கொள்கைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவரது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை இன்றும் தெய்வமாக போற்றி வருகின்றனர் என்றார் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்.
கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு விழா, "கல்கி' சதாசிவம் நினைவுச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் "வாழ்க நீ எம்மான்' என்ற தலைப்பில் பேசியது:
சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டிருந்த "கல்கி' சதாசிவம் காந்தியின் அஹிம்சை தத்துவங்களைப் பின்பற்றினார். சதாசிவத்தின் தைரியத்தைக் கண்டுவியந்த சுப்பிரமணிய சிவா, அவரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழுநோயால் அவதியுற்ற சுப்பிரமணிய சிவாவுக்கு சேவை செய்தார்.
எவர் ஒருவருக்கு மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒரே நிலையில் இருக்கிறதோ அவரே மகாத்மா என வடமொழி வரையறை செய்கிறது. காந்திக்கு இந்த மூன்றும் இருந்தது. தன்னையும் தனது செயல்பாடுகளையும் விமர்சித்தவர்களை மதித்தவர். மிகப் பெரிய போராட்டங்களைச் சந்தித்தபோதும் நாட்டின் நலனையே மூச்சாகக் கொண்டு இறுதிவரை மக்களுக்காகப் பாடுபட்டார். இறப்பு வந்தபோதும் கொள்கை தவறாதிருத்தல், சகோதரத்துவம், பகைவருக்கும் அருளுதல், அஹிம்சை ஆகிய சிறந்த குணங்களுக்காக பிரகலாதன், நபிகள் நாயகம், ஏசுநாதர், புத்தர் ஆகிய நான்கு பேரோடு காந்தியை ஒப்பிடுகிறார் நாமக்கல் கவிஞர்.
காந்தியின் கொள்கைகள் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின. அதனால்தான் ஒத்துழையாமை இயக்கம் நான்கு கண்டங்களில் 12 நாடுகளில் பரவியது. பேரன்பு கொண்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றதால் காந்தியின் இறுதி யாத்திரை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டது. அன்றும் இன்றும் மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் காந்தியின் கொள்கைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்றார்.
முன்னதாக கலைச் சிறப்பும், சமுதாய சிந்தனையும் இணைந்ததான மிகச் சிறந்த விளம்பரமாக நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட லின்டாஸ் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக அதன் துணைத் தலைவர் ரமேஷுக்கு கல்கி சதாசிவம் நினைவு விருதை சங்கர நேத்ராலயா மருத்துவமனை துணைத் தலைவர் மருத்துவர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு தலா ரூ.7,500 கல்வி உதவித் தொகையை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வழங்கினார். இந்த விழாவில் நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், கே.சந்துரு, கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் சீதாரவி, கௌரி ராம்நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.