கந்தசாமி, தாம்பரம்:
குழந்தைகள் படம் வரைந்து பார்ப்பதற்கான புத்தகங்களை நிறைய வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதெமி வெளியிட்ட "நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்' என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். நான் வாங்கிய இன்னொரு புத்தகம், "பிரபஞ்சனின் படைப்புலகம்' . நா.பார்த்தசாரதியின் நாவல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய "சத்தியவெள்ளம்', "பொன்விலங்கு' ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன். நவீன எழுத்தாளர்களின் இலக்கியப் புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். இமயம் எழுதிய "பெத்தவன்' அவற்றில் ஒன்று.
சமூகப் பிரச்னைகள், தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்னைகள் தொடர்பான புத்தகங்களும் எனக்குப் பிடிக்கும். பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். காவிரி நீர் பிரச்னை தொடர்பான புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன்.
சென்ற ஆண்டை விட புத்தகக் கண்காட்சியில் நெரிசல் குறைவு. அதனால் புத்தகங்களைத் தேடிப் பார்த்து தேர்ந்தெடுப்பது எளிதாக உள்ளது.
எம்.ஜி.ராஜேந்திரன், பெரம்பூர்:
நான் பெரம்பூரில் உள்ள "கலிகி அரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி' நூலகத்தில் நூலகராக இருக்கிறேன். ஏற்கெனவே எங்கள் நூலகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நிறைய புத்தகங்களை இப்போது வாங்கியிருக்கிறோம். மாணவர்களுக்கு பெரியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் வழிகாட்டியாக அமையும் என்பதால், மகான் ஸ்ரீ நாராயணகுரு, ஷீரடிசாய்பாபா, அருணகிரி நாதர், பட்டினத்தடிகள், குமரகுருபரர் உள்ளிட்ட பல பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாங்கியிருக்கிறோம்.
பழந்தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, தேம்பாவணி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பாரதிதாசனின் குடும்ப விளக்கு ஆகிய நூல்களையும் வாங்கியிருக்கிறோம்.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக சரித்திர நாவல்களை வாங்கியிருக்கிறோம். ராஜபேரிகை, கடல் ராணி, ராஜமுத்திரை, யவனராணி, கடல்புறா ஆகியவற்றை வாங்கியிருக்கிறோம்.
அதேபோன்று, INVENTIONS THAT MADE HISTORY, THE THOUGHT FOR THE DAY, OUR NATIONAL SONG, BONSAI உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமான ஆங்கில நூல்களை வாங்கியிருக்கிறோம்.
பள்ளியில் பயிலும் இளம் மாணவர்களின் விருப்பத்தை அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற புத்தகங்களை அவர்களுக்குக் கொடுப்பேன்.
எங்கள் பள்ளியில் நடைபெறும் பல்வேறு போட்டிகள், ஆண்டு விழாவின்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கவும் புத்தகங்களை வாங்கியிருக்கிறோம்.
ஆங்கில கதைப் புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய வாங்கியிருக்கிறோம்'' என்றார்.