காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டை அடுத்த கொத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம் மகள் சரிதா(15). அவர் கீச்சலம் உயர் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காலை வழக்கம் போல் காலை 8.30 மணிக்கு பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற அவர் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக சுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சரிதாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கீச்சலம் கிராமத்துக்கு அருகில் உள்ள ஓடையில் துண்டு துண்டாக எலும்புகளும், பள்ளி மாணவியின் சீருடை, செருப்பு ஆகியவையும் இருப்பதைப் பார்த்த விவசாய கூலித் தொழிலாளர்கள், அது பற்றி போலீஸாருக்குத் தககல் தெரிவித்தனர். அதன் பேரில், ஆர்.கே.பேட்டை போலீஸார், அந்த எலும்புகள், சீருடை, செருப்பு ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். அது தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில், காணாமல் போன மாணவி சரிதாவின் பெற்றோரை வரவழைத்துக் காட்டினர். அப்போது சீருடையும், செருப்பும் தங்கள் மகள் அணிந்திருந்தவைதான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் உறவினரான சங்கரய்யா(21) என்ற இளைஞர், சரிதாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததும், அதை சரிதா ஏற்கவில்லை என்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் சரிதாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
தனது காதலை சரிதா ஏற்காததால் சங்கரய்யா ஆத்திரமடைந்து
மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து, மேலும் நான்கு பேருடன் சேர்ந்து கொலை செய்து அங்கிருந்த ஓடையில் புதைத்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.