ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பை (ஸ்மார்ட் கிளாஸ்) திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் லோகமணி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
திருத்தணி ஆலமரம் தெருவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, தனியார் பொறியியல் கல்லூரியின் நிதியுதவி மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை வட்டாரக் கல்வி அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார்.
திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் லோகமணி, திறன்மிகு வகுப்பறையை திறந்து வைத்துப் பேசுகையில், பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் முழுமனதுடன் ஈடுபட்டு, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதும், அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகும்.
ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதில் ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், பள்ளிப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர் பாபு, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் சரஸ்வதி உள்பட திருத்தணி ஒன்றிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.