காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஜே.ஜி.புருஷோத்தமன், பார்த்தசாரதி, இமானுவேல், டி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று, வீரமரணம் அடைந்த வீரர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வழக்குரைஞர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
திருத்தணியில்...
திருத்தணி கமலா தியேட்டர் அருகில், தீயணைப்பு, மின்சாரம், கல்வி, மருத்துவம், வருவாய் ஆகிய அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேசியக் கொடியுடன் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து நகரம் முழுவதும் அமைதி ஊர்வலம் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப், சுதந்திரா பள்ளியின் தலைவர் பேராசிரியர் முனைவர் வி.ரங்கநாதன், அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ஹேமநாதன், மின்வாரியத் துறை அதிகாரி சம்பத், வியாபாரிகள் சங்கச் செயலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.