திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச பூக்கள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சர்வதேச பூக்கள் தினம் (ஜன.19) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். அப்போது, மாணவர்களிடம் அவர் பேசியது: மாணவ, மாணவியர் தங்களது வாழ்வில் லட்சியத்தோடு படிக்க வேண்டும். தங்களது எதிர்கால இலக்கை பள்ளிப் பருவத்திலேயே நிர்ணயித்து, அதை நோக்கி உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, பள்ளியில் பல்வேறு சாதனைகள் செய்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்வில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட மைதானத்தில், பிரதமர் மோடி வடிவத்திலும், தாமரைப் பூ வடிவத்திலும் 4,500 மாணவ, மாணவியர் அமர்ந்து சாதனை படைத்தனர். நிகழ்ச்சிக்கு, பாஜகவின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.