திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் அப்பு சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சங்கரன், துணைத் தலைவர் பொன்.அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 21 மாத ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மாதந்தோறும் ரூ.1,000 மருத்துவப் படி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 சதவீத பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் உள்பட ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வந்தவாசி கிளை சார்பில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் இராச.வேணுகோபால் தலைமை வகித்தார். கிளைச் செயலர் கே.கன்னியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தாஸ், கிளைப் பொருளாளர் எஸ்.நடராஜன், தெள்ளாறு கிளைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.