செய்யாறு அருகே திருட்டுப் பழி சுமத்தியதால் மனவேதனையடைந்த முதியவர் மின் வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு வட்டம், புரிசை கிராமம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவரும், இவரது மனைவியான காமாட்சியும் புதுச்சேரியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்குச் சென்றனர். அங்கு தங்கும் விடுதியில் உறவினர்கள் சிலருடன் தங்கியிருந்த அவர்கள், மீண்டும் கிராமத்துக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், ராஜேந்திரனை புதன்கிழமை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்ட உறவினர்கள், ரூ.50 ஆயிரத்தை காணவில்லை என்றும், நீங்கள் எடுத்தீர்களா என்றும் கேட்டனராம். இதனால், மனவேதனையடைந்த ராஜேந்திரன், வீட்டுக்கு அருகில் இருந்த மின்மாற்றியில் மின் வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில், அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.