செங்கம் அருகே உள்ள செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கி 17-ஆவது ஆண்டாக சிறந்த வங்கிக்கான விருதை பெற்றது.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 1958-இல் தொடங்கப்பட்டது.
மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கரியமங்கலம், கொட்டகுளம் உள்பட 21 கிராம மக்களுக்கு பயன்படும் வகையில், இந்த வங்கி பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கூட்டுறவு வார விழாவில், அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக சிறந்த வங்கிக்கான விருதை செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு வங்கி பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆரணியில் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்
எஸ்.ராமச்சந்திரன், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அன்பழகனிடம் சிறந்த வங்கிக்கான கேடயத்தை வழங்கினார். இது 17-ஆவது ஆண்டாக வழங்கப்படும் விருதாகும். மேலும், வங்கியின் தொடர் சேவையைப் பாராட்டி கூட்டுறவு சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்திக்கு சான்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாநில கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் அமுதாஅருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தொடர்ந்து 17-ஆவது ஆண்டாக சிறந்த வங்கிக்கான விருது பெற்றதற்காக கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அன்பழகன், சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.