குடிநீர் கோரி, சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராம மக்கள் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சிச் செயலர் குப்பனிடம் அந்தப் பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியிடம் மனு அளித்தனர். அப்போது, இந்திரவனம் ஆதிதிராவிடர் காலனிப் பகுதிக்கு 3 நாள்களுக்குள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.