கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பூஷன் அபியான் திட்டத்தின் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவிகள், வளரிளம் பெண்கள் பச்சைக் காய்கனிகள், அரிசி சாதம், பருப்பு வகைகள் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
உணவு உண்பதற்கு முன்பு கைகளை சோப்புப்போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். குளித்த பிறகு, துவைத்த ஆடைகளை அணிந்து தூய்மையாக இருக்க வேண்டும். யோகா உள்ளிட்ட உடல் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுலு, மகளிர் திட்ட வழி நடத்துநர்கள், ஊட்டச்சத்து மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.