திமுக, காங்கிரஸ் கட்சியினரைத் தண்டிக்க வலியுறுத்தி, செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு ரகசியமாக செய்த உதவிகளை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே பகிரங்கப்படுத்தியுள்ள நிலையில், போர் குற்றம் புரிந்ததை விசாரித்து உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் செப். 25-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டது.
அதன் பேரில், திருவண்ணாமலை மாவட்ட அளவில் பொதுக் கூட்டம் நடத்துவது குறித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில், ஆரணியில் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தூசி கே.மோகன் எம்எல்ஏ, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சமூக நலம் - சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, திரைப்பட நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.