செய்யாறு அருகே வரதட்சிணைப் புகாரின்பேரில், பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
செய்யாறு வட்டம், சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). பொறியியல் படித்துள்ள இவர், காஞ்சிபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மேல்நந்தியம்பாடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் மகாலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஓராண்டாக கூடுதலாக வரதட்சிணை வாங்கி வரக் கோரி, மகாலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்தனராம். கூடுதல் வரதட்சிணை வாங்கி வராததால், கடந்த 16-ஆம் தேதி மகாலட்சுமியை அவரது தாய் வீட்டுக்கு மணிகண்டன் அனுப்பினாராம். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி சனிக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், அவரது தந்தை சந்திரசேகர் (50), அண்ணன் நாராயணசாமி (32), அண்ணி லட்சுமி (28)
ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார். மேலும், மணிகண்டன், சந்திரசேகர், நாராயணசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.