போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தேரி கிராமத்தில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அண்மையில் அகற்றினர்.
போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியைச் சேர்ந்த சித்தேரி கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. 230 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 7 விவசாயிகள் சுமார் 67 ஏக்கர் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனராம்.
இதனால், ஏரியில் நீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பொதுப் பணி, வருவாய்த் துறையினரிடம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனர்.
இந்த நிலையில், ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, வருவாய்த் துறையினர் 2 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வந்து, ஏரி ஆக்கிரமிப்பை அண்மையில் அகற்றினர். அப்போது, வட்டாட்சியர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் கலைவாணி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.