ஆரணியை அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் பழைமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, தினமும் மலை மீதுள்ள பொன்மலை நாதர் கனககிரீஸ்வரருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, பெரியநாயகி அம்மனுக்கு தினமும் பல்வேறு சிறப்பு அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உத்ஸவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலை }மாலை வேளைகளில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டபெரியநாயகி அம்மன் கனககிரீசுவரர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்த்தப்பட்டு, மாலை 3 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மீனாட்சிசுந்தரம், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் ரவி கணேஷ், கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு: மாட வீதிகளில் திருத்தேர் வீதி உலா வந்த போது, புது தெரு அருகே தேவிகாபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி கஸ்தூரி (52), மோர் விநியோகம் செய்த போது, கூட்ட நெரிசலில், தேர் அருகே தள்ளப்பட்டு, அதன் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த அவ ரை விழாக் குழுவினரும், போலீஸாரும் மீட்டு,போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வை த்தனர். அங்கு,அவர்இறந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.