ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சார்பு நீதிமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சுமார் 75 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தின் முதல் தளத்தில் சார்பு நீதிமன்றம் இயங்கி வந்தது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராக மாற்றுத் திறனாளிகள் மற்றும் விபத்தால் காயமடைந்தோர் இந்த நீதிமன்றத்துக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள கட்டடத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆம்பூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கதிரவன், மாவட்டக் குற்றவியல் நீதிபதி ஜி. ரூபனா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். பார் அசோசியேஷன், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.