வேலூர் தலைமை அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சனிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், நேரம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாகவும், அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏதுவாகவும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமையொட்டி, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் பிற வழக்கமான வேலை நாளைப்போல் சனிக்கிழமையும் செயல்படும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தின்படி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
இம்முகாமில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்து, விண்ணப்பப் பதிவு எண் (ஏஆர் என்) பெறுவதுடன், இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் செலுத்தி நேர்காணலுக்கு நேர ஒதுக்கீடு பெறலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பப் பதிவு எண்ணைக் கொண்ட அச்சு நகலுடன், தேவையான அசல் சான்றிதழ்கள், சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் பிரதி ஆகியவற்றை அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும். புதிய மற்றும் மீண்டும் வழங்கும் பாஸ்போர்ட் வகைகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இம்முகாம் மூலம் சுமார் 195 விண்ணப்பதாரர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.