நாட்டறம்பள்ளி அருகே ஜெயபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கழிப்பறை வசதி கேட்டு மூதாட்டி மனு அளித்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி மங்கை. பிறவியிலேயே கண் பார்வையற்றவர். இவரது கணவர் முனிசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது, மூதாட்டி மட்டும் தனியே கிராமத்தில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயபுரம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மனுவுடன் அதிகாரிகளுக்காக காத்து கொண்டிருந்தார். கண் பார்வையற்ற மூதாட்டியை கவனித்த வட்டாட்சியர் குமார், தனித் துணை ஆட்சியர் அல்லி ஆகியோர் மூதாட்டி அருகே சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது வீட்டருகே தனிநபர் கழிப்பறை கட்டடம் கட்ட அரசு அனுமதி பெற்று கழிப்பறை கட்டடம் கட்டி வருவதாகவும், தனது வீட்டருகே வசித்து வரும் தங்கராஜி என்பவர் இங்கு கழிப்பறை கட்டடம் கட்டக் கூடாது மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட தனித் துணை ஆட்சியர், மூதாட்டியின் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவருக்கு விரைவில் கழிப்பறை கட்டி தர நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் குமார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.