கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், சமூக நல அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகள் பெற்று, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, வேலூர் மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட அரிசி, இதர உணவுப் பொருள்கள், மருந்துகள், உடைகள் ஆகியவற்றை தாராளமாக அளித்திட வேண்டும். இந்த நிவாரணப் பொருள்களை அந்தந்த வட்டாட்சியரிடம் ஒப்படைத்திட வேண்டும்.