ஆற்காட்டில் கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆற்காடு பூபதி நகரைச் சேர்ந்தவர் ரவி (45). இவரது மனைவி மாரி. இந்நிலையில் ரவி கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போனதாக அவரது மனைவி மாரி (38) ஆற்காடு கிராமிய போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் பேரில், போலீஸார் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு, மாரியை அழைத்துச் சென்று காண்பித்தனர்.
ஆனால் அந்த சடலம் தனது கணவருடையது இல்லை என தெரிவித்தார். அதன்பின்னர், வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. மேலும், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ரவியின் மனைவி மாரி, திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் (48) தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த ரவி மாரியைக் கண்டித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த மாரியும், முருகனும் சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி குடி போதையில் இருந்த ரவியை கட்டையால் அடித்துக் கொலை செய்து, தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.