காட்பாடி அருகே ரயில் மோதியதில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
காட்பாடி அருகே அரும்பகுதி திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42), டெய்லர். இவர் திங்கள்கிழமை அப்பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் மோதியதில் சரவணன் உயிரிழந்தார். காட்பாடி ரயில்வே போலீஸார் அவரது சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், லத்தேரி ரயில்வே கேட் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.