வாலாஜாபேட்டை அருகே அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வாலாஜாபேட்டை அடுத்த வள்ளுவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) லாரி ஓட்டுநர். அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமி வாலாஜாபேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த சிறுமியை மணிகண்டன் கடந்த 2014 ஆகஸ்ட் 4-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், நல்லாவூருக்கு கடத்திச் சென்றார். பின்னர் அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனிடையே, சிறுமியின் பெற்றோர் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து வாலாஜாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் மணிகண்டன், அவரது தந்தை, தாய், சகோதரர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், 2014 நவம்பர் 11-ஆம் தேதி மணிகண்டன் உள்பட
4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3
ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், மணிகண்டனின் தந்தை, தாய், சகோதரர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.