ஓசோன் படலம் சிதைவதைத் தடுக்க இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை அவசியம் என்று பள்ளி மாணவர்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரதி தெரிவித்தார்.
தேசிய பசுமைப்படை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக ஓசோன் தினம் காட்பாடி டிரினிடி மெட்ரிக். பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார். பள்ளித் தாளாளர் மல்லிகா சந்திரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரதி பேசியதாவது:
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு மக்கள் பயன்படுத்தும் வேதிப்பொருள்களே முக்கியக் காரணமாகும். குளோரோ, ப்ளோரோ கார்பன் எனும் குளிரூட்டி பொருள் ஓசோனை சிதைத்து அதன் அளவை குறைப்பதில் முதலிடத்தில் உள்ளது. ஒரு சி.எப்.சி. மூலக்கூறு ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கக்கூடியது.
இதை ஓசோன் கொல்லி என்கிறோம். ஓசோன் அளவு குறைந்தால் பூமியில் வெப்பம் உயர்ந்து துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகி கடலின் நீர்மட்டம் உயரும். காலநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும். பலவித நோய்கள் மனிதர்களைத் தாக்கக்கூடும். எனவே, மாணவர்கள் இளம் வயதிலேயே இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சீ.முரளீதர் தடை செய்யப்பட்ட, தூக்கி வீசப்படும் நெகிழிகள் எவை என்பதையும், அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய இயற்கைப் பொருள்கள் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கினார்.
ஆசிரியர் புருஷோத்தமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செலஸ்டியன்தாஸ் நன்றி கூறினார்.