கிராம பொதுசேவை மையங்களை மக்கள் அதிக அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டம் முள்வாய், ஆணைப்பாக்கம், வேலூர்பேட்டை, கோணலம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி முள்வாய் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, தலைமை வகித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பேசியது:
கிராமங்களில் இருசக்கர வாகனங்களில் மூன்று பேராக செல்வது மிகவும் தவறு. மேலும் உரிமம் வாங்கிவிட்டாலே போதும் என வாகனங்களை இயக்க முயலக்கூடாது. வாகனங்களுக்கு காப்பீடு மிகவும் முக்கியம். உரிய காலத்தில் காப்பீடு சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.
கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் பொதுச்சேவை மையத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறிய பணிகளுக்காக நகரங்களுக்கு சிரமப்பட்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளுக்காகத்தான் என பொதுமக்கள் நினைக்கக் கூடாது. வளர்இளம் பெண்கள் இம்மையங்களில் தங்களை பதிவு செய்துகொண்டு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பயன் பெறலாம் என்றார் அவர். முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் துறை அலுவலர் ஜெயபிரகாஷ், அரக்கோணம் வட்டாட்சியர் ஆர்.பாபு, அரக்கோணம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மதிவாணன், குடிமைப் பொருள் வழங்கல் துணை வட்டாட்சியர் குமார், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.