புரட்டாசி மாதம் என்பதால் வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை குறைந்து விலையும் சரிவடைந்துள்ளது.
பொதுவாக ஹிந்துக்கள் புரட்டாசி மாதத்தில் இறைச்சி, மீன் உணவுகளைத் தவிர்ப்பது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது முதலே வேலூர் மாவட்டம் முழுவதும் இறைச்சி, மீன் விற்பனை வெகுவாக சரிந்துவிட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை குறைந்ததை அடுத்து அவற்றின் விலையும் சரிந்துள்ளது.
குறிப்பாக, கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட பெரிய சங்கரா மீன் ரூ.120-க்கும், கெலங்கா ரூ. 180 லிருந்து ரூ. 80-க்கும், வஞ்சிரம் ரூ. 800-லிருந்து ரூ. 700-க்கும், வவ்வால் ரூ. 400-லிருந்து ரூ. 250-க்கும், மத்தி ரூ. 150-லிருந்து ரூ.100-க்கும், சீலா ரூ. 200-லிருந்து ரூ.150-க்கும், எறா ரூ. 400-லிருந்து ரூ. 300-க்கும், நண்டு
ரூ. 200-லிருந்து ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அதேசமயம், இந்த விலை சரிவு இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.