திருப்பதியில் என்.டி.ஆர். அறக்கட்டளை சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் ரத்த வங்கியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
திருப்பதியில் உள்ள சிம்ஸ், ரூயா, பேர்ட் உள்ளிட்ட அதிநவீன, பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வரும் நோயாளிகள் தேவையான ரத்தம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அறுவை சிகிச்சைக்கான ரத்தத்தை அளித்து வருகின்றனர்.
அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு போதிய ரத்தம் வழங்கும் நோக்கில் திருப்பதியில் உள்ள கோட்ட கொம்மல தெருவில் என்.டி.ஆர். அறக்கட்டளை சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் ரத்த வங்கியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை திறந்து வைத்தார். இங்கு அனைத்து வகையான ரத்த வகைகளும் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கும். அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படுவோர் என்.டி.ஆர். அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உடனடியாக ரத்தம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.