தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் சாதனை புரிந்த அரக்கோணத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை வளாகத்தில் செங்குட்டுவன் சாரண, சாரணியர் முகாம் உள்ளது. இந்திய சிலம்ப சம்மேளனம் 16-ஆவது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளை பிப். 7 முதல் 10-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடத்தியது. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 900 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், அரக்கோணம் செங்குட்டுவன் சாரண, சாரணியர் முகாமைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 16 பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்தனர்.
அவர்களுக்கான பாராட்டு விழா அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வேலூர் மாவட்ட சிலம்பக் கழகச் செயலர் பி.ஜே.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். அரக்கோணம் டிஎஸ்பி துரைபாண்டியன், சாதனை புரிந்த 16 மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தார்.
அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
கே.வசந்தி, மாவட்ட சிலம்பக் கழக தலைவர் டி.மணி, பொருளாளர் எம்.பி.ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.