சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகன், நளினி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். எனினும், அவர்கள் இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை சந்திக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விரைவான முடிவு எடுக்கக் கோரி வேலூர் மத்திய சிறையில் முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினி ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் முருகன், நளினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு சிறை மருத்துவக் குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
சிறைத் துறை டிஐஜி கே.ஜெயபாரதி வெள்ளிக்கிழமை இரவு முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நளினிக்கு பரோல் வழங்க வேண்டும்; சோதனை என்ற பெயரில் சிறையில் உள்ள கோயில் பூட்டை உடைக்கக் கூடாது என்று முருகன் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அதை சிறைத் துறை டிஐஜி ஏற்றுக்கொண்டதை அடுத்து முருகன் இளநீர் பருகி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்தது. அத்துடன், அவர் நளினிக்கு கடிதம் ஒன்றையும் அளித்தார். அதில், தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம் நளினியிடம் அளிக்கப்பட்டதை அடுத்து அவரும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை முருகனும், நளினியும் சந்தித்துப் பேசுவது வழக்கம். எனினும், சிறை விதிமுறைகளை மீறி உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் வெள்ளிக்கிழமை இரவுடன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டபோதிலும் சனிக்கிழமை நடக்க இருந்த முருகன், நளினி சந்திப்பு நடைபெறவில்லை.