தமிழக முதல்வர் அறிவித்த ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவித் தொகை பயனாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி, தெங்கால் கிராம மக்கள் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை
ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள், விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் இத்திட்டத்துக்கான பயனாளிகளின் பட்டியல் சரிபார்ப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் அறிவித்த சிறப்பு உதவித் தொகை பயனாளிகள் பட்டியலில் வாலாஜாபேட்டை வட்டம், தெங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் இல்லை எனக் கூறி அந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பயனாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி தெங்கால் கிராம மக்கள் ராணிப்பேட்டை - விஷாரம் சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிப்காட் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து
சென்றனர்.