குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ. 1.55 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இக்கல்லூரியில் ரூ. 1.55 கோடியில் 5 வகுப்பறைகள், 2 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டன. இவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து புதிய கட்டடத்தில் கோவிந்தாபுரம் வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.ராமு, குத்து விளக்கேற்றி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் எஸ். காவேரியம்மாள், தமிழ்த் துறைத் தலைவர் அ.மலர், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் சி. ஜெயராமன், உதவிப் பொறியாளர் எம்.சண்முகானந்தன், ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கே. பெருமாள், செ.கு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.