திமுக பிரமுகரின் மனைவியிடம் 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் வி.எல்.ஜோதி. அரக்கோணம் நகர திமுக பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி செல்வி (48) புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் காந்திநகரில் உள்ள ஹவில்தார் முனுசாமி தெருவில் உள்ள ஒருவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அந்த வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தில் செல்வி காத்திருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபர்கள், திடீரென செல்வியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முயன்றனர். அப்போது செல்வி அச்சங்கிலியை இறுக்கமாக பிடித்த நிலையில் சங்கிலியின் பெரும் பகுதி அறுந்து அந்நபர்களின் கைகளில் சென்று விட்டது.
அதைத் தொடர்ந்து பைக்கில் வந்தவர்கள் செல்வியைத் தாக்கியதில் அவர் தனது வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.