வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி நிலவுவதாகக் கூறி கிராம மக்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
வறுமைக்கோட்டுக் கீழே வாழும் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்கெனவே உள்ள வறுமைக்கோடு பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக் கீழே வாழும் குடும்பங்களின் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், இதனால் பெருமளவிலான குடும்பங்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, வேலூர் அருகே பெருமுகை ஊராட்சி பிள்ளையார்குப்பம், அண்ணாநகரில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த குடும்பத்தினர் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அப்போது, அந்த குடும்பங்களின் பெயர்கள் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெறாதது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊராட்சி செயலரிடம் மனு அளித்தால் அதன்பேரில் தகுதியுடைய குடும்பங்களுக்கு தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.