சூளகிரியில் வியாழக்கிழமை (நவ.15) அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் த.முருகேசன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் துறையின் கூட்டு முயற்சியில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக சிறப்பு பதிவு முகாம் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையில் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
எனவே, இந்தப் பதிவு முகாமில் தொழிலாளர்கள் முழுமையாக நிறைவு செய்த பதிவு விண்ணப்பம், 2 புகைப்படங்கள், அசல் குடும்ப அட்டை, அரசு பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான படிவத்துடன் நேரில் வரவேண்டும்.
ஏற்கெனவே தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தங்களின் பதிவினை இந்த முகாமில் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே, பதிவு பெற்ற தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இந்த முகாமில் அளித்து, தங்களது பதிவு எண்ணுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.